
ஈழத்து நூலக வரலாற்றின் பிதாமகன் கே.எம்.செல்லப்பாவின் 130-ஆவது பிறந்ததினம், கடந்த பிப்ரவரி 24, 2026 அன்று யாழ்ப்பாணத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழ் மாநகர சபை மற்றும் பொது நூலக நிர்வாகம் இணைந்து நடத்திய இந்த விழாவில், மாநகர ஆணையாளர், தலைமை நூலகர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு அந்த அறிவுப் புரட்சியாளருக்கு தங்களின் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.

செல்லப்பாவின் குடும்பத்தினர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டு, நூலகம் உருவான காலத்துச் சவால்களை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டனர்.
“அன்று அவர் ஏற்றிய அந்த அறிவுத் தீபம், இன்று எமது இனத்தின் அழியாத சொத்தாக ஒளிவீசுகிறது” என வாசகர்கள் மலரஞ்சலி செலுத்திப் போற்றினர். 1933-இல் தன் இல்லத்தில் வெறும் 844 நூல்களுடன் அவர் விதைத்த அந்தச் சிறு விதை, இன்று உலகத் தமிழர்களின் ஒப்பற்ற அடையாளமாக வளர்ந்து நிற்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த அறிவுக்கோவில், ஆசியாவிலேயே போற்றத்தக்க இடத்தைப் பெறத் துணைநின்ற ரெவ். பாதர் டி. எம். எஃப். லோங், கே. எஸ். நரசிம்மன், எஸ். ஏ. சபாபதி, டாக்டர் ஐசக் தம்பையா மற்றும் பேராசிரியர் எஸ். ஆர். ரங்கநாதன் ஆகியோரின் அளப்பரிய பங்களிப்பும் நன்றியுடன் நினைவுகூரப்பட்டன.
சொந்த வசதியைத்த் துறந்து, எளிய மக்களுக்காக இந்த ‘அறிவுக்கோவிலை’ நிமிர்த்திய அந்த மாமனிதரின் வரலாறு, இன்றைய படைப்பாளிகளுக்கும் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கே.எம்.செல்லப்பாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..

(தகவல்: செ.வே. முத்தமிழ் மன்னன்)


