
கோலாலம்பூர், ஜன.17:
தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்பதைப் போல அனைவரின் வாழ்விலும் அனைத்து நலமும் அமைந்திட இறைவனிடம் இறைஞ்சுவதாக
உழவர் திருநாள்- தமிழர் திருநாள்- தைப் புத்தாண்டை முன்னிட்டு, மஇகா தேசிய துணைத் தலைவரும் தமிழ் இலக்கிய வட்டத்து சொல்வேந்தருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், ஐயன் திருவள்ளுவர் வாய்மொழி கொண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துடன் தைப்புத்தாண்டு சிந்தனையையும் ஒருசேர வெளிப்படுத்தி இருக்கிறார்
திருக்குறள் பொருட்பால், அரசியல் இயல், செங்கோண்மை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள
வானோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி
என்னும் இரண்டாவது(542) குறளைத் துணைகொண்டு இம்மலையகத் தமிழ்க் குடியினருக்கு இலக்கிய மனம் ததும்பும்படியும் தமிழியப் பாங்கு மிளிரும் வண்ணமும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
செம்மைமிகு மழையை நம்பி உலகத்து உயிர்கள் வாழ்வதைப்போல மன்னவனின் செங்கோலை நம்பியே குடிகள் வாழ்கின்றன.
அறமும் மறமும் தப்பாத நீதியும் நெறியும் வழுவாத செங்கோலை ஒரு மன்னவன் நிலைநிறுத்தினால், குடிகள் நல்வாழ்வுபெறும்.
இத்தகைய மன்னவனே மக்களுக்கு இறையெனக் கருதப்பட்டனர் மன்னராட்சி நிலைத்த அக்காலத்தில்;
அதைப்போல, மக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் செங்கோல் வென்றதா சிலம்பு வென்றதா என்பதல்ல கேள்வி;
பாராளும் மன்னவனே ஆனாலும், தவறிழைத்தால், அவனது செங்கோலை ஓர் எளிய பெண்ணின் சிலம்பும் சாய்த்துவிடும் என்பதுதான் சிலம்பு சொல்லவந்த செய்தி என்று என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தருமான மு.சரவணன் பொங்கல் வாழ்த்திற்கு நன்னெறிசார் இலக்கிய சாயத்தைப் பூசியிருந்தது பாராட்டிற்குரியது.


