
மலேசியாவில் அடகு நிலையம் அல்லது அடகுக் கடை நடத்துபவர்கள், பெரும்பாலும் சீன சமூகத்தினராக இருக்கும் நிலையில், மலேசியத் தமிழர்களும் இந்தத் தொழிலில் முனைப்புகாட்டுவது வர்த்தக நோக்கில் மிகவும் பாராட்டிற்குரியது என்று மஇகா தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று ‘டி’சாரா அடகு நிலைய’த்தை நேற்று திறந்து வைத்து பேசுகையில் குறிப்பிட்டார்.
நாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரில், ‘தூங்கா வர்த்தக முனையமாக பிரிக்ஃபீல்ட்ஸ் என்னும் ‘லிட்டல் இந்தியா’ பகுதி உருமாறிவரும் தற்போதைய சூழலில், அதுவும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத இடத்தில் இந்திய சமுதாயத்தின் சார்பில், குறிப்பாக தமிழர் ஒருவர் இத்தகைய வர்த்தக நிலையத்தை புதுமை அம்சங்களுடன் தொடங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். குறிப்பாக, மற்ற சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் அடகுக் கடை போன்ற தொழில்களில் நம்மவர்களும் கால்பதித்து வெற்றி பெற வேண்டும் என்று விக்னேசுவரன் வாழ்த்தினார்.
ஸ்ரீதரன் தலைமையிலான ‘டி’சாரா அசெட்ஸ் வென்சர்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான அடகுக்கடை நேற்று பிரிக்பீல்ட்ஸில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டபோது மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு.சரவணன், கோலாலம்புர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, டத்தோ த.மோகன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


