
‘யூபிஎஸ்ஆர்” என்னும் ‘Abbreviation’ மலேசியாவில் மிகவும் பிரபலம்.
மலேசிய ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான கல்விப் பயணத்தில் UPSR(ujian Pencapaian Sekolah Rendah) என்னும் இந்த அடைவு நிலைத் தேர்வை எதிர்கொண்ட பின்னரே இடைநிலை பள்ளிக்கு செல்ல நேரிடும்.
நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆறாம் வகுப்பு மாணவர்களை எல்லாம் ஒரு புரட்டு புரட்டியெடுத்து விடும் இந்தத் தேர்வு, இப்பொழுது அடையாளம் அற்று விட்டது.
ஆனாலும் மலேசியத் தமிழ் பள்ளிகளை பொருத்தவரை நான்கு, ஐந்து, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி மட்டத்தில் தேர்வு நடத்தப்படுகிறது; இதுவும் இல்லாவிட்டால் மாணவர்கள் ஆரம்ப கல்வியை முடித்து இடைநிலை பள்ளிக்கு செல்லும் பொழுது அவர்களை வகுப்பு வாரியாக தரம் பிரிப்பதற்கான வரைமுறை இல்லாமல் ஆகிவிடும்.
இதைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பள்ளி மட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் கல்வி அமைச்சின் வழிகாட்டுதலுடன் தேர்வு நடத்தப்படுகிறது.
அதற்கான பாட நூல்களை இயற்றிய ஆசிரியர்கள், பிழை திருத்தியவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குத்தான் இன்று பிப்ரவரி முதல்நாள் முற்பகலில் மலேசியத் தலைநகரில் நூற்கடல் எனப்படும் ஜெயபக்தி குயில் நிறுவனத்தில் சிறப்பு செய்யப்பட்டது.

ஜெயபக்தி நிறுவனத்தின் தலைவர் டத்தோ கு. செல்வராஜு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் எஸ் எஸ் பாண்டியன், மன்றத்தின் தேசிய செயலாளரும் கிள்ளன் மாவட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்ற தலைவருமான தமிழரசு சுப்பிரமணியன், சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி மகேஸ்வரி ராஜகோபால் உள்ளிட்ட தலைமை ஆசிரியர்கள் சிலாங்கூர்-கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச மாநிலங்களில் இருந்து ஏராளமான தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், ஜெயபக்தி நிறுவனத்தினர் என அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பாடநூல் ஆசிரியர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழ் மொழி பாடநூல் ஆசிரியர்களான தமிழரசி ராமகிருஷ்ணன், ராணி ரமணா, புனித மலர் சிற்றரசு, புனித மலர் முனியாண்டி, கனகவல்லி கோவிந்தராஜு, ஈஸ்வரி ஆறுமுகம், செல்வராணி ராஜேந்திரன், ஷாலினி குணாளன் ஆகியோருடன்;
‘தேசிய மொழி’யான மலாய்ப் பாடநூல் ஆசிரியர்கள் பொன்மொழி ராமலிங்கம், புனிதவதி கணேசன், ஹேமலதா பழனியாண்டி, சரஸ்வதி குமார், நரேந்திரன் அங்கப்பா;
மற்றும் ஆங்கில மொழி பாடநூல் ஆசிரியர்களான காந்திமதி வரதன், கலைவாணி குசேலன், விசாலாட்சி சொக்கலிங்கம், ஜெயசுதா ஜெயபாலு, பவானி ரத்தினகுமார்;
தவிர கணித பாடநூல் ஆசிரியர்களான மகாலட்சுமி கந்தசாமி, அமுதம் பாண்டுரங்கன், லட்சுமி பன்னீர்செல்வம், கலைச்செல்வன் சுப்பிரமணியன், புவனேஸ் கிருஷ்ணன், ஜோன்சன்;
மேலும் அறிவியல் பாடநூல் ஆசிரியர்களான நீலா மயில்வாகனன், லீலாவதி மலையாளம், கவிதா லட்சுமணன், சந்திரமதி சதாசிவம், பிரேமலதா வருமானந்தன்;

மேலும் வரலாற்றுப் பாடநூல் ஆசிரியர்களான ப. நித்தியா தேவி, ரேணுகாதேவி பாண்டுரங்கா, நலமாறன் தன ராசா உள்ளிட்டோர் ஜெயபக்தி குயில் நிறுவனத்தின் சார்பில் சான்றிதழ் அன்பளிப்புடன் சிறப்பிக்கப்பட்டனர்.
ஜெயபக்தி நிறுவனத்தினர் இந்த நூல்களை அச்சிட்டதுடன் அவற்றை மலிவான விலையில் தமிழ் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளனர். தவிர பெற்றோருடன் தமிழ் பள்ளி ஆசிரியர்களும் இந்த நூல்களை வாங்கி ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்ட டத்தோ செல்வராஜு, இதுகுறித்த தகவலை பரவலாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் படி ஊடகத்தினரையும் கேட்டுக் கொண்டார்.

‘நாலும் தெரிய நாளும் படிப்போம்’ என்பதும் ‘வாசிப்பே சுவாசிப்பு’ என்பதும் இந்த ஜெயபக்தி குயில் நிறுவனத்தின் அடையாள மொழிகளாகும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் பள்ளிகளுக்கு அவ்வப்பொழுது நூல்களை இலவசமாக அளிப்பதுடன் மாணவர்களின் கல்வி பயணத்திலும் ஏதோவொரு வகையில் தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும் ஜெயபக்தி குயில் நிறுவனத்தின் பணி தொடர குமரி வாழ்த்துகிறாள்.
இந்த நிகழ்ச்சியை வல்லம்புரோசா தமிழ்ப் பள்ளி ஆசிரியர் இராசி. தமிழரசி சிறப்பாக வழி நடத்தினார்.


