
ஹிண்ட்ராஃப் சரித்திர இயக்கம், அதன் அரசியல் கரமான மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி ஆகியவற்றின் அருந்தொண்டரும் துணிவுமிக்க களப்பணியாளருமான நாகேஷ் கிருஷ்ணன், தன் ஆன்மநேய பயணத்தின் ஒரு கூறாக கும்பமேளா புனித நீராடலில் பங்குகொண்டபின் இயற்கை எய்தினார் என்ற தகவல் எங்களை கடும் அதிர்ச்சிக்கு ஆட்படுத்தியுள்ளது.

மலேசிய இந்திய சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் நலிந்த தரப்பினரின் மீட்சி, மனித உரிமை, சம நீதி ஆகியவற்றுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் திரு. நாகேஷ். கொள்கையின்பால் அவர் கொண்ட தாக்கம் ஆழமானது; மேலும் தளராத அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை, நெருக்கடியான நேரத்திலும் அவர் காட்டிய துணிச்சல் ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளித்தது.

அவர் விட்டுச்சென்ற இடம், எவராலும் ஈடுசெய்ய முடியாதது; இடைவிடாத சவால்கள், இன்னலை எதிர்கொண்டபோதிலும் அவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார்; உண்மை மற்றும் நீதிக்கான போராட்டத்தில் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. ‘நினைவில் வாழும்’ நாகேஷின் தியாகமும் பங்களிப்பும் ஹிண்ட்ராஃப் மற்றும் எம்ஏபி ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
நாகேஷின் மறைவு, நம் இயக்கத்திற்கு மாபெரும் இழப்பாகும். அவரின் ஆன்மாவிற்கு எல்லாம்வல்ல பரம்பொருள் சாந்தியை அளிக்க வேண்டும். அன்னரின் மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கியுள்ள அவர்தம் குடும்பத்தார் ஆறுதலையும் தேறுதலையும் பெற்றிட இறைவனடியை நாடுவோம்
ஓம் நமசிவாய!
ஹிண்ட்ராஃப் சரித்திர இயக்கம் &
மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி.
13-02-2025
(நாகேஷ் கிருஷ்ணனின் மறைவை ஒட்டி, குமரியும் தன் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறாள்)


