
அன்பர் தினம் என்றும் அன்பிற்குரியவர் நாள் என்றும் பசப்பிக்கொண்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ஆம் நாளுக்கு என்னதான் வெளிப்பூச்சு பூசினாலும் அது காதலர் தினம் என்பதுதான் உண்மை.
உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடமும் காதல் குறித்த தாக்கத்தையும் மெல்லிய மயக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியது இந்தக் காதலர் தினம்.
இந்த இனிய நாள் தொடர்பில் கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் பிப்ரவரி 14ஆம் நாள் முன்னிரவில் காதலர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா வட்டத்தில் நன்கு அறியப்பட்டவரும் நினைவில் வாழும் டான்ஸ்ரீ சுப்ராவின் இணையில்லா ஆதரவாளருமான நினைவில் வாழும் பீடோர் ஜெயராமனின் மகள் சரளாதேவி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு வருகை தந்த தொலைக்காட்சி புகழ்-தமிழ்த் தென்றல்-ஞான செவ்வேல் முனைவர் எஸ் டி கலையமுதன் ‘காதல் இனிது’ என்ற தலைப்பில் நகைச்சுவையாக பேசி நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரின் உள்ளம் கவர்ந்தார்.
தமிழ்நாடு முழுவதும் ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பாக பேசிவரும் கலையமுதன் புதுவிதமான பாட்டு பட்டிமன்றத்தின் நடுவராகவும் திகழ்ந்து வருகிறார்.

வாழ்க்கைப் பயணத்தில் இளம் காதலர்கள் முதல் முதியவர்கள்வரை கணவன் மனைவி இடையே ஏற்படும் ஊடல் குறித்தெல்லாம் இனிமையாகவும் நகைச்சுவையாகவும் பேசினார்.
அட்லாண்டிக் நிறுவனங்களின் குழுமத் தலைவர் டத்தோ டாக்டர் எம் கோபாலகிருஷ்ணன், கல்வியாளர் ம. மன்னர் மன்னன் மற்றும் சிலரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிகமானவர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்
ஏற்பாட்டாளர் சரளாதேவி அனைவருக்கும் சுவையான உணவு ஏற்பாடு செய்திருந்தார். தவிர அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார் சரளாதேவி.


