
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் நிகழும் 2025-ஆம் ஆண்டுக்கான முதல் மத்திய செயலவைக் கூட்டம் மலரும் 16.3.2025 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, காலை 11.00 மணி அளவில் கோலாலம்பூர் பிரிக்பீல்சு, பெலியா சாலையில் அமைந்துள்ள ருக்குன் தெத்தாங்கா கூட்ட அரங்கில், கழக தேசியத் தலைவர், மானமிகு. நாக.பஞ்சு தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் தமிழினத்தை இழிவு படுத்திய இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்று கழகத்தின் செயலாளர் ச. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது தமிழினத்தை நாகரீகம் தெரியாதவர்கள் என்றும் ஜனநாயகப் பண்பு இல்லாதவர்கள் என்றும் பிரதான் இழிவாக கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்து ஆறாவது பிறந்தநாள் விழா தொடர்பான ஏற்பாடு குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
எனவே, பொறுப்புமிக்க மத்திய செயலவை உறுப்பினர் அனைவரும் கழக நலன் கருதியும் மொழி – இன நலனை முன்னுறுத்தியும் இந்தக் கூட்டத்தில் தவறாமல், மறவாமல் கலந்து கொள்வதுடன் பயனான ஆலோசனையும் வழங்கி ஆதரவு நல்கும்படி அன்பரசன் சண்முகம் மேலும் கேட்டுக்கொள்கிறார்.


