
118 ஆண்டுகள் ஆன்மீக வரலாற்றுப் பெருமையுடன் தெலுக் பாகாங்கில் குடிகொண்டுள்ள அருள்மிகு சிங்கமுக காளியம்மன் ஆலய மாசி மக தெப்பத் திருவிழாவில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜு கலந்துகொண்டு இறை தரிசனம் பெற்றார்.
கடல் தேவதையான அருள்மிகு சிங்கமுக காளியம்மனை மாசி மாத பௌர்ணமி நாளில் வழிபட்டு அருளாசி பெறுவது பெரும்பேறு என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டபின் தெரிவித்தார் பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரராஜு.

இந்த வட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமான அருள்மிகு சிங்கமுக காளியம்மன் தெப்பத் திருவிழாவில் பங்கேற்கும்படி பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வர் ஜெகதீப் சிங் டியோ, பினாங்கு மாநில ஆட்சி மன்றத்தின் சமூக நலம், இஸ்லாம் அல்லாத பிறசமய நல உறுப்பினர் லிம் சியீவ் கிம், மலேசிய இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவான மித்ரா பொறுப்பாளர் பி. பிரபாகரன், புக்கிட் குளுகோர் எம்பி ராம் கர்ப்பால் சிங், பினாங்கு மேயர் பொறியியலாளர் இராஜேந்திரன் ஆகியோருடன் தானும் கலந்து கொண்டதாக டத்தோஸ்ரீ சுந்தரராஜு இதன் தொடர்பில் தகவல்
தெரிவித்தார்.

ஆலயத்தின் சார்பில் அனைவருக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மாசி மகத் திருவிழாவின் முக்கிய அம்சம், தெப்பத்தேர் ஊர்வலமாகும். இறை உருவங்களைத் தாங்கிய தேர், கடலில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாகும்.
பன்னெடும் காலமாக நடைபெற்றுவரும் இந்த தெப்பத் தேர் திருவிழாவில் கலந்து கொள்வதும் அம்மன் அருள் நாடுவதும் சுற்று வட்டார பக்தர்களுக்கு முக்கியமான ஆன்மிக கடமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

பத்தி மார்க்கத்தில் ஈடுபடும் அதேவேளை பக்தர்கள் சுற்றுச்சூழலையும் மதித்து பாதுகாக்கும் பொருட்டு நெகிழிப் பைகள், நுரைப்ப திலான தட்டு உள்ளிட்ட பண்டங்கள் பயன்படுத்துவதை குறைக்கும்படியும் அப்படியே பயன்படுத்துவோர் அவற்றை கடல் நீரிலும் தரையிலும் கண்ட இடத்தில் வீசாமல் அதற்குரிய இடத்தில் சேர்க்கும் படியும் வட்டார இந்து சங்கம் உள்ளிட்ட சமய-சமூக அமைப்புகளின் சார்பில் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பக்தர்கள் செவிசாய்த்து நடந்துகொண்டது பாராட்டிற்குரியது என்று டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு மேலும் தெரிவித்தார்.
பினாங்கு மாநில சுற்றுச்சூழல் பிரிவின் நிர்வாக ஆணையர், ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் அனைவருக்கும் பினாங்கு மாநில அரசின் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ சுந்தரராஜு மேலும் தெரிவித்தார்.


