
மலேசிய இந்திய காங்கிரஸ்-மஇகா தேசிய மேனாள் உதவித் தலைவரும் மேனாள் செனட்டருருமான டத்தோ மோகன் தங்கராஜ் நேற்று மார்ச் 18-ஆம் நாள் 53ஆவது அகவையை எட்டியதன் தொடர்பில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தம்பதியர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
கட்சியின் முன்னாள் தலைவர் துன் சாமிவேலுவால் கட்சி அரசியலில் தட்டித்தட்டி வளர்க்கப்பட்ட மோகன், தீவிர அரசியலில் ஈடுபடும் அதேவேளை விளையாட்டுத் துறையிலும் நாட்டம் கொண்டவர். குறிப்பாக கால்பந்து விளையாட்டில்;
இதன் விளைவாக சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் களத்தை இழந்தாலும் மோகன் இன்னமும் செல்வாக்குமிக்க தலைவராகவே இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் வாய்ப்பை வெறும் 58 வாக்குகளில் இழந்தாலும் கட்சியிலும் சமூகத்திலும் இன்னமும் ஆளுமைமிக்கவராக விளங்கும் மோகன், மீண்டும் மஇகா தேசிய அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று அவரின் இல்லத்தில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழாவில் அவருடைய அரசியல்-நட்பு- சமூக-விளையாட்டு வட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோடம்பாக்கத்தை சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகர், துணை நடிகர், குணச்சித்திர வேடதாரி என்ற அளவில் திரைப்படத்துறையில் பயணித்த குணாஸ், தற்பொழுது புலிப்படை என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். இந்த நிகழ்வில் அவரும் கலந்துகொண்டு டத்தோ மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


