
தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு பூமாயி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா, நேற்று, ஏப்ரல் 11-ஆம் நாள் ஏராளமான சிவாச்சாரியார்கள் முன்னிலையிலும் சிவஸ்ரீ பிச்சை குருக்கள் தலைமையிலும் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்வை தமிழகத்தின் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் கொடி அசைத்து துவங்கி வைத்தார். விழாவிற்கான ஏற்பாட்டை அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளையின் புதல்வர் ஆறு தங்கவேலு பிள்ளை, ஆறு தங்க நாச்சியார் மற்றும் திருப்பத்தூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

இந்த விழாவில் அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளையின் பெயரன்கள் டத்தோ நா வசந்தராசன், நா ரமேஷ்வரன், நா சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். திருப்பத்தூரில் உள்ள கோவில்கள் சார்பாக அருள்மிகு பூமாயி அம்மனுக்கு சீர் கொண்டு வரப்பட்டது.

சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி, லோட்டஸ் குடும்பங்களின் சார்பாக காரைக்குடி சண்முகம் மற்றும் திருப்பத்தூர் ஊர் பொதுமக்கள் சுற்றி உள்ள கிராமத்து பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அருள்மிகு பூமாயி அம்மனின் ஆசி பெற்றனர்.


