
மலேசிய இந்து சங்க தேசிய மகளிர் பிரிவு ஏற்பாட்டில் ‘பெண்ணியம் போற்றும் மகளிர் அரங்கம்’ என்ற பெயரில் மகளிர் கருத்தரங்கம், நாட்டின் பாரம்பரிய தலைநகரம் கோலாலம்பூரில் நடைபெற இருக்கிறது.

மேத் திங்கள் 10-ஆம் நாள், சனிக்கிழமை பிற்பகல் 3:00 முதல் இரவு 9:00 மணிவரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு, மலேசிய இந்து சங்க தேசிய மகளிர் தலைவர் முனைவர் ச.கலைவாணி தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

வழக்கம்போல இறைவணக்கத்திற்குப் பின் தேசிய மகளிர் பிரிவின் துணைத்தலைவி ‘விவேகரத்னா’ திருமதி ஆர். காயத்திரியின் வரவேற்புரை-யுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், பெண்கள் சாதனைப் பற்றிய காணொளிக் காட்சிக்குப் பின், சமய விழிப்புணர்வு இல்லத்தில் இருந்து தொடங்குகிறது என்னும் தலைப்பில் டி.எம்.புஷ்பவள்ளி உரை ஆற்றுகிறார்.

தொடர்ந்து, மனநலமும் ஆரோக்கியமான குடும்பமும் என்னும் தலைப்பில் இந்து சங்க மத்திய செயலவை உறுப்பினர் ‘விவேகரத்னா’ ஆர்.பரமேஸ்வரி உரை நிகழ்த்துகிறார்.

தொடர்ந்து, மலேசிய இந்து சங்க தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபு, மகளிர்த் தலைவி முனைவர் கலைவாணி, இந்து சங்க தேசியத் தலைவர் ‘சங்கபூசன்’ தங்க கணேசன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து, ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் ‘செனட்டர்’ சரசுவதி கந்தசாமி ‘இந்திய பெண்களுக்கான அரசியல் அதிகாரம்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

கோலாலம்பூர், கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள Signature தங்கும் விடுதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு கட்டணம் இல்லை.


