
இளைஞர்களிடையே பாடும் திறனை அடையாளம் காணும் மிக நல்ல முயற்சி ‘பிந்தாங் மின்னல் 2025’.

இன்றைய பொழுதுபோக்கு உலகம் எவ்வளவுதான் மாற்றம் அடைந்து இருந்தாலும் தரமும் தொன்மையும் உண்மையான கலை ஆர்வமும் நிரம்பிய மேடையாக ஆர்டிஎம்-இன் ‘பிந்தாங் மின்னல்’ தொடர்கிறது.

இவ்வாண்டு முதன் முறையாக 5 மாநிலங்களில் களம் இறங்கி, குரல் தேர்வு நடத்தியது மின்னல் பண்பலை வானொலி.

மே 17 இல் ஆர்டிஎம் நெகிரி செம்பிலான், மே 24ல் ஆர்டிஎம் பினாங்கு, மே 31-இல் ஆர்டிஎம் பேராக், ஜூன் 14 ஆர்டிஎம் பகாங், ஜூன் 21-இல் GM Mall, Klang ஆகிய மையங்களில் மின்னல் பண்பலை வானொலி சார்பில் நடத்தப்பட்ட குரல் தேர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொண்ட இளைஞர்கள் ஏராளம்.

இதில், நேரடியாக கலந்துகொள்ள வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, சமூக வலைத்தளம் மூலம் கலந்து கொள்ளவும் வழி அமைத்தது மின்னல் பண்பலை வானொலி.

இசைத் துறையில் தேர்ந்த, மிகவும் தரமான நடுவர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வெற்றியாளர்கள் ஆகஸ்ட் இரண்டாம் நாள் நடைபெற உள்ள அரையிறுதிச் சுற்றுக்கு தயாராகி வருகின்றனர்.

ஆர்டிஎம், தனது நெடிய பயணத்தில் ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறது. அதில் ஒரு கூறாக நாட்டில் உள்ள திறமையான கலைஞர்களைத் தேடி, அவர்களுக்கான வாய்ப்புகளை தந்து கொண்டே இருக்கிறது.

டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா, அலிகேட்ஸ், சுடிர்மான் என நம் நாட்டு நட்சத்திரங்களுக்கான வெளிச்சம் தொடங்கியது ஆர்டிஎம் மேடையில்தான்;

தற்பொழுது ஆர்டிஎம் மின்னல் பண்பலை வானொலி அடையாளம் கண்டிருக்கின்ற அந்த 10 குரல்களை இன்னும் உலகம் அறியவில்லை; அவர்களை அறிமுகப்படுத்துவதில் மின்னல் பண்பலை வானொலி மகிழ்ச்சி அடைகிறது.

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திரன் குணசேகரன், அபிஷேகப் பிரியன் சரவணன், கண்மணி கணேசன், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த உன்னி தேவன் பாஸ்கரன், ஏரன் தோமஸ் மனோகல், தேஷாளன் சீயன், பினாங்கின் கௌதம் மகேந்திரன், ஜோகூரைச் சேர்ந்த நவீனா புகழேந்தி, வெங்கடேஸ்வரி ரவீந்தர், பகாங் மாநிலத்து விஜய் ஹரி இராமசாமி ஆகிய 10 பேரும் ஆகஸ்ட் இரண்டாம் நாள் நடைபெற இருக்கின்ற அரை இறுதிபா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பதை மின்னல் பண்பலை வானொலி சார்பில் அறிவிப்பதாக மின்னல் பண்பலை வானொலி அதிகாரி ருஃபினா மேரி அம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார்.


