
ஜெயலலிதாவின் தோழி கே. சசிகலாவின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி பகுதியில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் மலேசியாவைச் சேர்ந்த 4 பேரை தமிழ்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 29-ம் தேதி இரவில் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் வசிக்கும் கார்த்திகேயன் (50) என்பவரின் வீட்டின் உள்ளே புகுந்து முகமூடி அணிந்த ஐந்து நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
வீட்டிலிருந்தவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தார் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஐவரை வீட்டிற்குள் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரில், நால்வர் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என உள்ளூர் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சரவணன் (44), இளவரசன் (26), கோபி (35), விமலன் (19) ஆகியோரே அந்நால்வர்.

இந்த நால்வரும் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமரனுடன் பழகியவர்கள் என்பதும் முன்னதாக குமரன் மலேசியாவில் வேலை பார்த்த சமயத்தில் அறிமுகமானவர்கள் என்பதும், தமிழ்நாட்டைச் சுற்றி பார்க்க வந்த நிலையில் குமரனுடன் சேர்ந்து இந்த நான்கு பேரும் கூட்டாக கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாகவும் மேல்விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்ததை அடுத்து, மலேசியாவைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்ற ஆணையின்படி சிறையில் அடைத்துள்ள விவரமும் தெரிய வந்துள்ளது.
இதன் தொடர்பில் உள்ளூர் தொலைக்காட்சியிலும் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, தலைமறைவாக உள்ள குமரனை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


