
ஷா ஆலம், ஆக.08: மலேசியக் கல்வி வரலாற்றில் தனியார் உயர்க்கல்வி நிறுவனமான மாஹ்சா பல்கலைக்கழகம்,உயர்கல்வி தர நிர்ணய மையமாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அதன் இணை வேந்தர் பேராசிரியர் தான்ஸ்ரீ டாக்டர் முகமட் ஹனிஃபா ஹஜி அப்துல்லா இன்று தெரிவித்தார்.
மலேசிய உயர்க் கல்வி தரநிர்ணய அகாடமி(MQA), தன் பிரதிநிதியாகவும் தர நிர்ணய மையமாகவும் (MQC)மாஹ்சா பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து உள்ளது, இந்த பல்கலைக்கழகத்தின் நீண்ட பயணத்தில் பெரும் அடைவு நிலையாகும்.
இந்த தனியார் பல்கலைக்கழகம் எட்டியுள்ள இத்தகைய உன்னத நிலை தங்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளதாக முஹம்மது ஹனிஃபா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் டிப்ளோமோ அல்லது பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் முழு நேரமாக படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் பகுதி நேரமாக வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு உயர்க்கல்வி நிறுவனங்களில், பல்வேறு நிலைகளில் இடைவெளி விட்டுகூட தேர்வு எழுதி பெறுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் டிப்ளோமோ அல்லது பட்டப்படிப்புக்கான தகுதியை தர நிர்ணயம்(Micro Credentials) செய்து அங்கீகரிக்கும் தகுதியை மாஹ்சா பல்கலைக்கழகம் எட்டியுள்ளதாக செனட்டரும் மருத்துவருமான ஹனிஃபா இதன் தொடர்பில் மாஹ்சா பல்கலைக்கழகத்தில் இன்று, ஆகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில் விவரித்தார்.
பல் மருத்துவம், தாதிமை, சுற்றுச்சூழல் சுகாதாரம், மருந்தக நிர்வாகம், மருந்தியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பட்டயக் கல்வி அல்லது பட்டப்படிப்பு மேற்கொள்ள முடியும்.

இத்தகைய நவீன கல்வி முறையில் எஸ் பி எம் தேர்வில் அமராத மாணவர்களும் தேர்ச்சி பெறாத மாணவர்களும் கூட இணைந்து தங்களின் கல்வி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
வேலை பார்த்துக்கொண்டே தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான கல்விப் பயணத்தை தொடரலாம்.
இந்த புதுமைக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் ஐந்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் அதிகமான கல்லூரிகளும் பயிற்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கல்வி நிலையங்களில் தேர்வு எழுதி 30 புள்ளிகள் என்னும் அடைவு நிலையை எட்டினாள் அவற்றை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கக் கூடிய தகுதியையும் அதிகாரத்தையும் மாஹ்சா உயர்க்கல்வி நிறுவனம் பெற்றுள்ளது.
இதற்கு அரச அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்று ஹனிஃபா பெருமையுடன் தெரிவித்தார்.
பட்டப் படிப்பாக இருந்தால் 120 புள்ளிகளும் டிப்ளோமா என்னும் பட்டயக் கல்வியாக இருந்தால் 90 புள்ளிகளும் பெற வேண்டும் என்று மலேசிய உயர் கல்வி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை சமுதாயத்திற்கு குறிப்பாக உயர்கல்வி மாணவர்களுக்கு அறிவிப்பதற்காக மாஹ்சா பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை துணை அமைச்சர் முஸ்தபா சக்முட் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார். இதில் மலேசிய உயர்க் கல்வி தரநிர்ணய அகாடமி(MQA)-யின் தலைமை நிர்வாக அதிகாரி தத்துவம் சத்தாரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது,


