இனிய நந்தவனம் மலேசியச் சிறப்பிதழ் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 10ஆம் நாள் மாலை 5:00 மணி அளவில் கோலாலம்பூர் செந்தூல் முத்தமிழ் படிப்பகத்தில் நடைபெற இருக்கிறது.

இலக்கிய மாலையாக மலரவிற்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு மாண்புறு தமிழர் விருதும் வழங்கப்பட இருக்கிறது என்று நந்தவனம் இதழ் ஆசிரியர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டின் நடுநாயக மாநகரம் திருச்சிராப்பள்ளியிலிருந்து கடந்த 28 ஆண்டுகளாக வெளிவரும் பருவ இதழாகவும் உலகத்தமிழர்களின் வரவேற்பைப் பெற்ற இதழாகவும் வெளிவருகின்ற இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத இதழ், ஒவ்வொரு மாதமும் சிறப்பிதழ் வெளியிட்டு தனித்துவ இலக்கிய அடையாளத்துடன் திகழ்கிறது.

தமிழ்மொழி வளர்ச்சி, கல்வி, கலாசாரம், மருத்துவம், தொழில், சுயமுன்னேற்றம் போன்ற தகவலுக்கு முன்னுரிமைக் கொடுத்து வெளிவரும் இனிய நந்தவனம் மாத இதழ் தமிழ்நாட்டில் பல மாவட்டச் சிறப்பிதழ்களை வெளியிட்டு வருவதோடு, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, போன்ற நாடுகளில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி சிறப்பிதழ்களையும் வெளியிட்டுள்ளது.

அந்த வரிசையில் நிகழும் ஆகஸ்டு மாத இதழ் மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் மலேசிய சிறப்பு மலராக வெளிவருகிறது .
மலேசிய எழுத்தாளர்களின், சிறுகதைகள். கட்டுரைகள், கவிதைகள் என சிறந்த படைப்புகளுடன் வெளிவரும் இனிய நந்தவனம் மலேசிய சிறப்பிதழின் வெளியீட்டு விழா கோலாலம்பூர் செந்தூல் முத்தமிழ்ப் படிப்பகத்தில் நடைபெறுவதை வாசக அன்பர்களுக்கும் ஏனையோருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நந்தவனம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மலேசிய பாரதி தமிழ் மன்றத் தலைவர் ஆர், தியாகராஜன் தலைமையில் செந்தூல் முத்தமிழ் படிப்பகத் தலைவர் பெ. இராமன் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் மலேசிய எழுத்தாளர் சங்க மேனாள் தலைவர் ஞானசைமன், மலேசிய திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகையுமான தேவராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இனிய நந்தவனம் மாத இதழின் தலைமை ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் ஏற்புரையாற்ற, கவிஞர் பச்சைபாலன் நிகழ்வை நெறியாள்கை செய்ய உள்ளார்.

இனிய நந்தவன மலேசிய வாசகர்களை ஒருங்கிணைத்து இலக்கியச் சந்திப்பாக நடைபெறும் இச்சிறப்பு விழாவில் மலேசியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில்
சிறப்பாக பணியாற்றிவரும் ஞானசைமன், . மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பு ஆசிரியர் ரெங்கசாமி@ சின்னராசு, மக்கள் ஓசை நாளிதழில் ஆசிரியர் பி.ஆர் .ராஜன், தமிழ்மலர் நாளிதழ் ஆசிரியர். கு.தேவேந்திரன் ஆகியோரின் இதழியல் பணியைப் பாராட்டி நந்தவனம் சந்திரசேகரனை தலைவராகக் கொண்டு செயல்படும் நந்தவனம் அறவாரியத்தின் மூலம் . ‘மாண்புறு தமிழர்’ என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

இவ்விழாவில் மலேசிய எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும்
கலந்து கொண்டு பெருமை சேர்க்கும்படி நந்தவனம் சந்திர சேகரன் மேலும் கேட்டுக்கொள்கிறார்.



