
கோலாலம்பூர் நவ 14-
மலேசியத் தமிழ் பத்திரிகைத் துறையில் நீண்டகாலம் பணியாற்றிய நிருபர் முருகனின் மருத்துவ சிகிச்சை நிதிக்கு மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் 5,250 வெள்ளி நிதியைத் திரட்டி தந்தது.
அதேசமயம் மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு. சரவணன், முருகன் சிகிச்சை நிதிக்கு 3,000 வெள்ளி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தமிழ் ஊடகத்தில் நீண்ட காலம் பணியாற்றிய முருகன், இரண்டு வாரத்திற்கு முன்பு எதிர்கொண்ட விபத்தில் வலக் கையில் முழங்கைக்குக் கீழ் இரண்டு எலும்புகளும் முறிந்தன.
ஓர் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள வேளையில் மற்றொரு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நிதி திரட்டப்பட்டது.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நிதி திரட்டப்பட்டது.
சங்கத்தின் சார்பில் பல நல்லுள்ளம் படைத்தவர்கள் நிதி வழங்கினர். மொத்தம் 5,250 வெள்ளி திரட்டப்பட்டது.அந்த நிதி இன்று நேரடியாக முருகனிடம் வழங்கப்பட்டது.
மேலும் டத்தோஸ்ரீ மு. சரவணன் 3,000 வெள்ளியை முருகன் சிகிச்சை நிதிக்கு வழங்கி பேருதவி புரிந்தார்.
ஆக மொத்தம் இன்று 8,250 வெள்ளி முருகன் மாமாவிடம் மருத்துவ நிதியாக ஒப்படைக்கப்பட்டது .
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகின்ற டத்தோஸ்ரீ சரவணன் தலைமையிலேயே முருகனிடம் நிதி வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது.

நிதியைப் பெற்றுக் கொண்ட முருகன் தனக்கு உற்ற நேரத்தில் ஆதரவளித்து உதவுகின்ற பத்திரிகையாளர் சங்கத்திற்கும் நேரில் வந்து நிதியுதவி வழங்கிய டத்தோஸ்ரீ சரவணனுக்கும் நன்றி தெரிவித்தார்.
முருகன் சிகிச்சை தொடர்பில் நிதி திரட்டிய மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் பணியை பெரிதும் பாராட்டுவதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், துணைத் தலைவர் தி.காளிதாசன், உதவித் தலைவர்கள் காளிதாசன் இளங்கோ, ஜீவா, ரவி முனியாண்டி, செயலாளர் வெற்றிவாணன் விக்டர், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மூர்த்தி, காளிதாஸ் சுப்பிரமணியன், இராமன் குட்டி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிலையில் கோலாலம்பூர் நூற்கடல் எனப்படும் ஜெயபக்தி நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் டத்தோ கு செல்வராஜ் நேரில் வந்து அவரும் முருகனின் மருத்துவ நிதிக்காக குறிப்பிட்ட தொகையை வழங்கி ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஆலோசகருமான டத்தோ செல்வராஜ் பத்திரிகையாளர் நலனில் ஈடுபாடு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


