
கோலாலம்பூர், நவ .16-
பெருநாள் காலங்களின் போது ஏழை எளிய மக்களையும் ஆதரவற்ற குழந்தைகளையும் ஒரு போதும் மறவாமல் அரவணைத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் வழங்கவேண்டும்.
பெருநாள் காலங்களில் அவர்களும் மிகவும் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று தர்ம தியாஸ் சமூக அமைப்பின் தலைவர் யுவராஜா ராமசந்திரன் தெரிவித்தார்.
தீபாவளி பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொது உபசரிப்புகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.
அதில் ஒரு கட்டமாக செராஸ், தாமான் தெனாகாவில் உபசரிப்பு நடைபெற்றது. ஆதரவற்ற குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியாரும் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மானின் சிறப்பு அதிகாரி
ஜொனதன் வேலா மற்றும் உடல் கட்டழகர் சமூகநல இயக்கத்தின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தீபாவளி மட்டுமல்ல மற்ற பெருநாள் காலங்களின் போதும் இந்த அன்பு குழந்தைகளை நாங்கள் அரவணைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம் என்று யுவா கூறினார்.
தைப்பூச ரத ஊர்வலத்தின் போது 50,000 பேருக்கு அன்னதானம் வழங்கினோம்.
இது தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவி வருகிறோம் என்றார் அவர்.
தகவல்: செ. வே. முத்தமிழ் மன்னன்


