
தொழில் முனைவர், சமையல் கலைஞர், நாடக ஆசிரியர், இயக்குனர் தயாரிப்பாளர் என்றெல்லாம் பல பரிணாமங்களைக் கொண்டிருக்கும் பூச்சி ரவி என்னும் மேடை நாடக படைப்பாளர் மீண்டும் ஒரு புதிய நாடகத்துடன் வலம்வர இருக்கிறார்.
கலைத்துறையை விட இவருக்கு சமூக பங்களிப்பும் மிகுதி; ம.இ.கா. மேநாள் தேசியத் தலைவர் நாட்டின் வடபகுதியில் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய நேரம் அது; அப்பொழுது யார் என்னும் மேடை நாடகத்தை தயாரித்து தமிழ் ரசிகர்களுக்கு அளித்ததன்மூலம் ஐம்பதாயிரம் வெள்ளியைத் திரட்டி அதை பல்கலைக்கழக வளர்ச்சி நிதியாக அளித்தவர் இந்த பூச்சி ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
இடையில் தன் சொந்த தொழிலில் மும்முரம் காட்டி வந்த இவர், தற்பொழுது ஒரு புதிய மேடை நாடகத்துடன் வலம் வர இருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் ‘உறவுகள்’ என்னும் நாடகத்தின் மூலம் பூச்சி இரவியின் நாடகவலம் இப்போது தொடர்கிறது.
மலேசியத் தமிழ் மேடை நாடகத் துறையில் புகழ்பெற்ற கலைஞரான பூச்சி ரவியின் கதை, வசனம், நாடக அமைப்பு, இயக்கத்தில் அடுத்த ஆண்டு மேடைக்கானவிருக்கும் உறவுகள் நாடகத்தின் உதவி இயக்குனராக ரோபட் செயல்படுகிறார்.

மலேசியத் தமிழ் கலை வட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் நன்கு அறியப்பட்ட எஸ் பி மணிவாசகம் தயாரிப்பில் வெளிவரும் இந்த நாடகத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக கரு பன்னீர் செல்வமும் ஆலோசராக சோலை பாஸ்கரனும் செயல்படுகின்றனர்
மணிவாசகத்தின் உந்துதலில் தற்பொழுது மீண்டும் தன் கலைப் பயணத்தில் நாட்டம் செலுத்த முனைந்திருக்கும் பூச்சி ரவியின் இந்த ‘உறவுகள்’ மேடை நாடக அரங்கேற்றம் 1-3-2026இல் இடம்பெறுகிறது.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தலை நகரத்து டான்ஸ்ரீ சோமா அரங்கில் இந்த நாடகம் நடைபெறும் என்று இதன் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் பொழுது இயக்குநர் பூச்சி ரவி தெரிவித்தார்.
இந்த நாடகத்தின் அறிமுக விழாவும் வசன படிவம் வழங்கும் விழாவும் ஒருங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன
மலேசிய கலை கலாச்சார இயக்க முன்னெடுப்பில் தயாராகிவரும் இந்த மேடை நாடகத்தின் ஏற்பாட்டு ஆதரவாளராக
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் கலை கலாச்சார அறவாரியம் விளங்குகிறது.
அத்துடன் கரு. பன்னீர் செல்வத்தின் தலைமையிலான மலேசிய முத்தமிழ்ச் சங்கம், இந்த நாடக தயாரிப்பில் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறது.
பூச்சி ரவி, எஸ்.பி. மணிவாசகம், கரு.பன்னீர்செல்வம், ரோபர்ட், சோலை பாஸ்கரன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மேடை காணவிருக்கும் உறவுகள் மேடை நாடகம், சமூக மறுமலர்ச்சி சிந்தனையையும் புத்தாக்க பார்வையையும் கொண்டிருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பின் பொழுது தெரிவித்தனர்.
குடும்ப உறவை மையப்படுத்தி உருவாகும் இந்த ‘உறவுகள்’ மேடை நாடகம், உயிரோட்டமானது என்ன பூச்சி ரவி தெரிவித்தார்
இந்த மேடை நாடகத்திற்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் முழு ஆதரவு வழங்கி உள்ள அதேவேளை, இதன் தொடர்பில் முதல் கட்டமாக 5,000 வெள்ளி நிதியும் அளித்து ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
காத்திருப்போம் அந்நாளை எதிர்பார்த்து..!


