
ஷா ஆலம், டிச 3-
Pusat Konvensyen Setia City மாநாட்டு மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுவரும் சிலாங்கூர் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் குயில் ஜெயபக்தி பதிப்பகம் முதன் முறையாகக் கலந்து கொண்டுள்ளது .
கடந்த சனிக்கிழமை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா, இந்தக் கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

நவம்பர் 30 ஆம் தொடங்கப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சி டிசம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
இதில், ஜெயபக்தி பதிப்பகம் முதன் முறையாகக் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தெரிவித்தார்.

பல நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் இந்தப் புத்தக கண்காட்சியில் இடம்பெற்றிருந்தாலும் தமிழ் புத்தகங்களை பிரதிநிதித்து குயில் ஜெயபக்தி நிறுவனம் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
குயில் ஜெயபக்தி பதிப்பகம் இங்கு கூடம் அமைத்துள்ளது.
ஜெயபக்தி பதிப்பகத்தின் தயாரிப்பில் வெளியான பள்ளிப் புத்தகங்கள், இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட தன்முனைப்பு புத்தகங்கள், நாவல்கள் ஆகிய அனைத்து புத்தகங்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
மேலும், மழலையர் பள்ளிகளுக்கான புத்தகங்கள், ஜெயபக்தியின் புதிய வெளியீடான திருக்குறள் புத்தகங்களும் இங்கு விற்பனைக்கு உள்ளது.
‘நாலூம் தெரிய நாளும் படிப்போம்’என்னும் தாரக மந்திரத்திற்கு ஏற்ப குயில் ஜெயபக்தி நிறுவனம் தொடர்ந்து தமிழ்பணி ஆற்றி வருகிறது என்றார் அவர்.


