
கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம் எச் 370 விமானம் 2014 மார்ச் ஏழாம் நாள் நள்ளிரவு புறப்பட்டது.
அடுத்த நாள் காலை 6:00 மணி அளவில் அது பெய்ஜிங் நகர பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கி இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி நடைபெறவில்லை; இந்த நூற்றாண்டுக்குரிய கடல் சார் மர்மங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது இந்த வான் போக்குவரத்து தொடர்பான சம்பவம்.
அந்த விமானம், இரு விமானியர், பயணியர், பணியாளர்கள் என 239 பேருடன் ஏதோ ஒரு கடலில் ஏதோ ஒரிடத்தில் சங்கமமாகி விட்டது.

அப்படி இல்லாமல் உலகின் எந்த மூலையில் ஏதோ ஓரிடத்தில் தரை இறங்கி இருந்தாலும் அது குறித்த விவரம் இதுவரை உலகுக்கு தெரிய வந்திருக்கும்.
இந்த நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து மார்ச் மாதம், குறிப்பாக எட்டாம் நாள் மலேசிய சமூகவியல், அரசியல், போக்குவரத்து உள்ளிட்ட தலங்களில் ஏதோ ஒரு வகையில் முக்கியமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் முக்கியமான இயற்கை பேரிடர்கள் யாவும் 26 ஆம் நாளில் தான் பெரும்பாலும் நடைபெறுகின்றன.

குறிப்பாக நவம்பர் டிசம்பர் பிப்ரவரி மாதங்களின் 26 ஆம் நாட்களில்தான் பெரும்பாலான இயற்கைப் பேரிடர்கள் நடைபெற்றுள்ளன.
இதுகுறித்த விளக்கமும் புரிதலும் பூகோள இயல் அடிப்படையில் எதுவுமே புரியவில்லை. ஆனாலும் புவியியல் தொடர்பான அறிஞர்களின் சிந்தனையில் இது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
அதைப்போல, மலேசியாவைப் பொருத்தவரை புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கிய 2001 ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கம்போங் மேடானில் நடைபெற்ற இன மோதல் சம்பவம், மார்ச் எட்டாம் நாள் உச்சத்தைத் தொட்டது.
மலேசிய இந்திய சமுதாயத்தின் அன்றைய தானைத் தலைவர் துன் ச சாமி வேலு வானொலியில் கண்ணீர் மல்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்ட சம்பவம் இன்றும் நினைவு கூரத்தக்கது.

அதைப்போல 2008-ஆம் ஆண்டு மார்ச் 08- நாள் இடம்பெற்ற அரசியல் நிகழ்வு மலேசிய அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்டு, ஆழிப் பேரலை தாக்கியதைப் போன்று பல அரசியல் மாற்றங்களுக்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் வித்திட்டது.
மலேசிய அரசியலைப் பொறுத்தவரை தேர்தல் களத்தில் 100% வெற்றியைப் பெற்றுவரும் ஒரேக் கட்சி மஇகா என்று செம்மாந்து மார்தட்டிக் கொண்டிருந்த துன் சாமிவேலனாரே அந்தத் தேர்தலில் மண்டியிட நேர்ந்தது.
அன்றைய நாளில், தமிழ் நேசன் நாளிதழ் முழுக்க அவருடைய பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகள் ஆக்கிரமித்து இருந்தன.
அந்த மார்ச் எட்டாம் நாள் நாட்டின் பன்னிரெண்டாவது பொதுத் தேர்தல் காலையில் தொடங்கி மாலையில் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய திலிருந்தே அவர் பின்னடைவை சந்தித்து வந்தார்; வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற நிலையிலும் சுங்ஙை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில்அதே நிலையில் நீடித்தார்
அதைப்போல 2014 மார்ச் 8 சம்பவம் வான் போக்குவரத்து அத்தியாயத்தில் இதுவரை விடை காண முடியாத பெரும முடிச்சாக மலேசியாவை மட்டுமல்ல; உலக வான் போக்குவரத்து கட்டமைப்பையே குழப்பத்தில் அழுத்தியிருக்கிறது.

அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் சீன நாட்டினர் மிக அதிகமாக இருந்தனர்.
நள்ளிரவில் தொடங்கிய அந்தப் பயணத்தின்போது காணாமல் போன சீன பயணிகள் தொடர்பான வழக்கில் நேற்று திங்கள் கிழமை பெய்ஜிங் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காணாமல் போன பயணியரின் குடும்பங்களுக்கு 2.9மில்லியன் யுவான் வீதம் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சீன தேசிய ஊடகமான சிசிடிவி என்னும் தொலைக்காட்சி ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
4இலட்சத்து 10 ஆயிரம் டாலருக்கான்னு இந்த இழப்பீட்டு நிதி, எட்டு பயணியர் சார்பில் கொடுக்கப்பட்ட 8 வழக்குகள் சம்பந்தப்பட்டுள்ளது.
இதே விமான விபத்தில் காணாமல் போன 47 சீன பயனியர் தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்குகள் மீட்டுக்கொள்ளப்பட்டன.

தவிர மேலும் 23 வழக்குகள் தொடர்பான விசாரணை தொடர்கின்றன.
இதன் தொடர்பில் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சார்பில் எந்த கருத்தோ விளக்கமோ பதிலோ இதுவரை வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.


