
சுயமரியாதைப் பயணமும் பகுத்தறவு சிந்தனையும் இயைந்த மலேசிய திராவிட இயக்க வரலாற்றில், கடந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பத்து மலை என்றால் மாரிமுத்து; மாரிமுத்து என்றால் பத்துமலை என்ற நிலை நிலவியது.
தொழில்முனைவராக இருந்தாலும் பகுத்தறவுப் பயிர் வளர உழைப்பு, நிதி, நேரத்தை யெல்லாம் அதிகமாக வழங்கிய ‘பெரியார் பெருந்தொண்டர்’ கா.மாரிமுத்து, உடல் நலிவு காரணமாக அண்மைய ஆண்டுகளில் பொது வாழ்விலிருந்து ஒதுங்கி இருந்தார்.

‘அறிவு ஆசான்’ தலைவர் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை ஏற்று நம்மோடு வாழ்ந்த அத்தகைய கா.மாரிமுத்து, இப்பொழுது, நம் நினைவில் வாழ தலைப்பட்டுவிட்டார்.
கடந்த 10.12.2025இல் மூப்பு காரணமாக வீட்டிலேயே மறைந்த அந்த பெரியார் பெருந்தொண்டர், மலேசிய திராவிடர் கழக பத்துமலை – கோம்பாக் கிளையை நீண்டகாலத்திற்கு வழிநடத்திய தலைவர்; அடுத்த நாள், அவரின் இல்லத்தில், சுயமரியாதை முறைப்படி இறுதி நல்லடக்க நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் நாக.பஞ்சு தலைமையில் ‘பெரியார் பெருந்தொண்டர்’ பாலசுந்தரன் வேலு இரங்கல் உரையாற்றி நிகழ்வை நெறிப்படுத்தினார். கழக வாழ்நாள் உறுப்பினர் ‘கொள்கைமணி’ பெரியார் பெருந்தொண்டர்’ துரை.முருகனும் இரங்கலுரையாற்றினார்.
நிறைவாக, கழகத்தின் மதியுரைஞரும் கொள்கைப்பரப்புக்குழுத் தலைவருமான ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.முத்தையா இறுதி நல்லடக்க நிகழ்வை நிறைவேற்றியபின், மாந்த நேய திராவிடர்க் கழகத்தின் சார்பில் மாரிமுத்து குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.




