
சிலாங்கூர் மாநிலம் ராவாங் பட்டணம் தாமான் ஹிஜாவ் என்னும் குடியிருப்பில் நீண்ட காலமாக செயல்படுகின்ற ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தை காப்பதற்காக இந்திய சமுதாயத்தினரின் பொருள் உதவியை சம்பந்தப்பட்ட இல்லத்தின் பொறுப்பாளர்களும் அந்த இல்லத்தை அடைக்கலம் நாடி உள்ள பெண்களும் பெரிதும் விழைகின்றனர்.
சுவாமி ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சதாசரின்
பக்தர்களால் 1998 ஆம் ஆண்டில் இந்த சமூக நல இல்லம் நிறுவப்பட்டது.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமய, ஆன்மீக, கல்வி, கலை, இசை நலம் சார்ந்து எண்ணற்ற பணிகளை ஆற்றி வருகிறது இந்த சமூகநல இல்லம்.
சமூக சிந்தனையாளரும் ஆன்மீக நெறியாளருமான முனைவர் குமரன் தலைமையிலும் பராமரிப்பிலும் செயல்படுகின்ற இந்த ஸ்ரீ சாரதா இல்லத்தில் ஐந்து வயது முதல் 2 7 வயது வரைப்பபட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த இல்லத்தை அடைக்கலம் நாடியுள்ளனர்.

சிறுமியரும் இளம் பெண்களுமாக அடைக்கலம் நாடியுள்ள இந்த இல்லத்தில், ஆன்மீக நெறியுடன் நடனம், சமையல், தையல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து கலை சார்ந்தும் தக்காரின் துணை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு சீனருக்கு சொந்தமான இந்த இல்லத்தை சம்பந்தப்பட்டவர் விற்பனை செய்ய முனைந்துள்ளதால் இந்த இல்லத்தை விட்டு வெளியேறும்படி சாரதா தேவி இல்ல நிர்வாகத்தினரே அவர் கேட்டுக் கொண்டிருப்பதால் இந்த இல்லம் தற்பொழுது பெரும் சிக்கலான நிலையை எதிர்கொண்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக இங்கே அடைக்கலம் நாடி உள்ள பெண்கள், ‘இதுவரை தாங்கள் வசிக்கும் கூடு சிதைக்கப்பட்டால் குருவிகள் எவ்வாறு பரிதவிக்குமோ’ அதைப்போல இந்த இல்லத்தில் அடைக்கலம் பெற்றுள்ள பெண்களும் கண்கலங்கி நிற்கின்றனர்.

8 இலட்ச வெள்ளி மதிப்புடைய இந்த இல்லத்தை கையகப்படுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட நிர்வாகத் தரப்பினரே ஏறக்குறைய ஒரு லட்சம் வெள்ளியை இதுவரை திரட்டியுள்ளனராம்.
இன்னும் ஏழு லட்சம் வெள்ளியை எப்படியாவது திரட்டி இந்த சமூகநல இல்லத்தை குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு நிலையத்தை அங்கேயே நிலை நிறுத்த விரும்புகின்றனர்.

இதன் தொடர்பில் உதவி நல்க விரும்பும் அன்பர்களும் கொடையரும் கீழ்காணும் எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்; உதவ முன் வரலாம்!
016-9067380
014-6435964
நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் முனைவர் அ. குமரன்.


