
அம்பாங், ஜன 17 –
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் இன்று அம்பாங் தாசேக் பெர்மாய் அருள்மிகு மாரியம்மன் கோவில் வளாகத்தில் தைப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்(மாநில அமைச்சர்) பாப்பா ராயுடு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் லெம்பா ஜெயா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சைட் அகமட், தெராத்தாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Yew Jia Haur உள்ளிட்ட அரசியல் தலைவர்-களுடன் ஆதிசங்கரர் திருமடத்தின் நிறுவனர் மகேந்திர குருக்கள்
உள்ளிட்ட சமய தலைவர்கள், சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் நடேசன், மோகன் ராஜ் மற்றும் கிராம தலைவி சரஸ் ஆகியோர் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
காலையில் சிறப்பு பூசைக்குப் பின்னர் பொங்கல் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 101 பானையில் பொதுமக்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
தோரணம் கட்டுதல், கோலம் போடுதல், மலர்ச் சரம் தொடுத்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





