
பரதநாட்டியம் என்பது உடலின் அசைவுகளால் உள்ளத்தின் பக்தியையும் பண்பாட்டின் பெருமையையும் வெளிப்படுத்தும் உயரிய கலை ஆகும்.
கலை அறிவும் ஒழுக்கமும் சேர்ந்தால் மட்டுமே ஒரு கலைஞன் முழுமை அடைவான். அந்தக் கலைப் பாதையில் ஒவ்வொரு நடனக் கலைஞருக்கும் சலங்கை பூஜை என்பது கனவுகள் நனவாகும் பொன்னான தருணமாகும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி, திரிஷூலா ஆர்ட்ஸ் குலோபல் அகாடமி சார்பில் நடைபெற்ற சலங்கை பூஜை நிகழ்வில், மூன்று ஆண்டு கால பயிற்சியால் வளர்ந்த நான்கு மாணவர்கள் தங்களின் அர்ப்பணிப்பையும் ஒழுக்கத்தையும் மேடையில் நிரூபித்தனர்.
முயற்சி திருவினை ஆக்கும்; முயற்சின்மை
இன்மைப் புகுத்தி விடும்
என்ற வள்ளுவன் வாக்கியத்தை உணர்த்தும் விதமாக, இது வெறும் ஒரு நிகழ்வு அல்ல; தன்னம்பிக்கை, பொறுமை மற்றும் உழைப்பின் வெற்றிக் கொண்டாட்டமாக அமையும்.

அந்த வகையில் ஆசிரியர் குருஸ்ரீ பேட்ரிசியாவின் வழிகாட்டலும் அர்ப்பணிப்பும் மாணவர்களின் கலைப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது;
அதுமட்டுமின்றி, கற்றலின் ஆழத்தை மாணவர்களுக்கு உணர்த்தி, கலைக்கு பணிவும் ஒழுக்கமும் ஊட்டியவர் கலை ஆசிரியர் குருஸ்ரீ பேட்ரிசியா.
சிறப்பு விருந்தினர்களாக குரு ஸ்ரீமதி மதுரா நாட்டிய மாமணி டாக்டர் குருவாயூர் உஷா துரை மற்றும் கனக நாட்டிய ஆசார்யா
ஸ்ரீ அப்துல்லா பின் அப்துல் ஹமீது
ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.
திரிஷூலா ஆர்ட்ஸ் குலோபல் அமைப்பினர் நிர்வாகத்தினர் தங்களின் பரதநாட்டிய வகுப்புகளை செராஸ், சுங்கை வே சக்தி ஈஸ்வரி ஆலயம், சன்வே PJS 9, கிளானா ஜெயா (Kelena Jaya) மற்றும் செர்டாங் ராயா ( Serdang Raya ) ஆகிய பகுதிகளில் சிறப்பாக நடத்தி, ‘இளமை அறிவு இருள் அகற்றும் தீபம்’ என்ற கருத்துக்கு ஏற்ப, இளம் தலைமுறையினரை கலையின் பாதையில் வழிநடத்தி வருகின்றனர்.


