
மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் நேற்று தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அதன் தொடர்பில் முதல் நாள் தன்னுடைய இல்லத்தில் கூட்டு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் மனம் கமழ, தமிழ் நெறியோடு
மலேசிய சைவ நற்பணிக் கழக தலைவர் சிவநெறி செம்மல் ந. தர்மலிங்கம் திருமுறை ஓதி இந்தக் கூட்டு பிரார்த்தனையை நிறைவேற்றினார்.
இந்து குடும்பங்களில் குறிப்பாக சைவ நெறியை பின்பற்றுகின்ற தமிழ்க் குடும்பங்களில் திருமுறையை ஓதி இறைவனுக்கு நன்றி சொல்வதுதான் பக்தி நெறியாக இருக்க வேண்டும் என்று அப்பொழுது அவர் குறிப்பிட்டார்.
திருமுறை ஓதி நிறைவேற்றப்பட்ட பூஜைக்கு பின்னர் டாக்டர் எம் சரவணன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, மலேசிய இந்து குடும்பங்களில் சமயம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் குடும்ப பிரார்த்தனை இடம்பெறுவது மிகவும் அவசியம் என்றார்
குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது அந்தந்த குடும்பத் தலைவரே திருமுறையை ஓதி, கூட்டுப் பிரார்த்தனையை சுருக்கமாக நிறைவேற்ற வேண்டும். இதற்காக வேறு யாரையும் அமர்த்த வேண்டிய அவசியம் இல்லை.
நமக்கான வேண்டுதலையும் கோரிக்கையையும் நாமே திருமுறை ஓதி பூசையை நிறைவேற்ற வேண்டும் அதே வேளை இத்தகைய பூசை நடவடிக்கையை சுருக்கமாக நடத்தினால்தான் இளைய சமுதாயத்தைக் கவர முடியும். அதை விடுத்து நீண்ட நேரம் இதை நிகழ்த்தினால் பரபரப்பான இன்றைய உலகில் இளைய சமுதாயத்தினர் சலிப்படைந்து ஒதுங்கிக் கொள்ள நேரிடும். இதை மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்
இல்லத்தில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனை, உரைக்குப்பின் வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவையும் பரிசு பொருளையும் வழங்கி மகிழ்வித்தார் டத்தோஸ்ரீ சரவணன்.


