தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்க மோதிரம் பரிசளித்து கௌரவித்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர்.

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா. தூய்மை பணியாளரான இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தியாகராயர் நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே கேட்பாரற்று சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை அடங்கிய பையைக் கண்டதும் அவற்றை அருகில் இருந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர், அந்த நகை உரிமையாளரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வை தொடர்ந்து தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. தமிழக முதல்வர் முக.க. ஸ்டாலின் பத்மாவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்-கான காசோலையை வழங்கினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பத்மாவை தன் இல்லத்திற்கு அழைத்து அவரைப் பாராட்டியதுடன் தங்க சங்கிலி அணிவித்து அவரை கௌரவித்தார்.
இந்த நிலையில் தற்போது கடல் தாண்டி பணியாளர் பத்மாவின் நேர்மைக்கான கௌரவம் தேடிச் சென்றுள்ளது.
மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் மு
குலசேகரன் தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையான செயல் குறித்து கேள்விப்பட்டு தன் உதவி அதிகாரியான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பிவைத்து, பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவம் செய்துள்ளார்.
அதிகாரி வடிவுக்கரசி, பணியாளர் பத்மா பணி செய்யும் இடத்திற்கே சென்று அவருக்கு மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்வின்போது தூய்மைப் பணியாளர் பத்மாவுடன் மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் மு .குலசேகரன் காணொளிகள் காட்சி மூலம் பேசி, அவருக்கு தன் பாராட்டைத் தெரிவித்துள்ளார்,


