
மலேசிய இந்து சங்கத்தில் மகளிர் மட்டும் வழிநடத்துகின்ற ஒரு வட்டாரப் பேரவை என்றால், அது செலாயாங் வட்டாரப் பேரவைதான். இந்த வட்டாரப் பேரவையை வழிநடத்துகின்ற தலைவர் புவனேஸ்வரி பழனியாண்டி. இவர் தலைமையில் இயங்கு-கின்ற இந்த வட்டாரப் பேரவையில், செய-லாளர் உட்பட அத்தனை பொறுப்புகளையும் மகளீரே ஏற்று அண்மைக்காலமாக சிறப்பாக வழி நடத்துகின்றனர்.
பெண்கள், தங்கள் வாழ்க்கையை வீட்டோடு வரையறுத்துக் கொண்ட காலம் போய் விட்டது; பொது வாழ்க்கைக்கு வருவதை இன்றைய காலத்தில் அதிகமாக பார்க்க முடிந்தாலும் இது போதாது. இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். இதுகுறித்து ஆண் சமுதாயம் அதிகம் சிந்திக்க வேண்டும்.
அந்த வகையில் பொது வாழ்க்கையில் அதுவும் ஆன்மீக பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதுவும் ஒரு வட்டார பேரவையை நடத்துகிற ப. புவனேஸ்வரிக்கு குமரியின் வாழ்த்து உரித்தாகட்டும்.
அண்மையில் உலக அளவில் கொண்டாடப் பட்ட மகளிர் தினத்தின் பொழுதுகூட, “இந்த நாளில் பெண் சமுதாயம் தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொள்வதும் துள்ளிக் குதிப்ப-தும் சற்று மிகையாகத்தான் தெரிகிறது; பெண்கள் போக வேண்டிய பாதையும் அடைய வேண்டிய இலக்கும் இன்னும் ஏராளமாக இருக்கின்ற நிலையில் அதற்-கான ஊக்கத்தையும் உந்துதலையும் ஒவ்வொரு பெண்ணும் தனக்குத்தானே பெறவேண்டிய நாளாக இந்த நாளைக் கருதலாம்” என்று தன்னடக்கத்துடன் தெரிவித்த புவனேஸ்வரி, தளராத உழைப்பும் தாழாத ஊக்கமும் தான் பெண்ணுக்கு எந்நாளும் கை கொடுக்கும் என்பதால் அன்றைய தினமும் பணிக்கு புறப்பட்ட வேளையில் தன்னுடைய எண்ணத்தை மேற்கண்டவாறு பதிவு செய்தார்.
அத்தகைய புதுமைப் பெண்ணான ப. புவனேஸ்வரி தலைமையிலான செலாயாங் வட்டாரப் பேரவையின் 26-ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று மாலையில் பத்துமலை அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் (Kennison Brothers) நடைபெறுகிறது.
மலேசிய கலை உலகம் என்னும் இணைய ஊடகத்தின் செயலாளராகவும் இவர் பணிபுரிகிறார்.
தைப்பூச சமயத்தில் பொது அமைப்புகளுடன் இணைந்து அன்னதான சேவையில் வாரக் கணக்கில் தொடர்ந்து ஈடுபடும் புவனேஸ்வரி சமூக தொண்டையும் இடையறாது ஆற்றி வருகிறார்.
இவரின் சேவையைப் பாராட்டி மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை இவருக்கு ‘விவேகரத்னா’ என்னும் பட்டத்தை அளித்துள்ளது.
புவனேஸ்வரியின் சமூக பயணமும் தொண்டு வாழ்க்கையும் ஆன்மீக சேவையும் தொடர மீண்டும் வாழ்த்துகிறாள் குமரி!


