
மலேசிய இந்திய மாணவ சமுதாய நலம் குறித்தும் TVET எனப்படும் தொழில் திறன் கல்வி விளக்கம் பற்றியும் மஇகா தேசிய மகளிர் பிரிவு ஏற்பாட்டில் ஜனவரி 18, சனிக்கிழமை மலாக்கா மாநில மஇகா(மலேசிய இந்தியர் காங்கிரஸ்) கட்டடத்தில் கூட்டம் நடைபெற்றது.
மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் மாண்புமிகு சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மஇகா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரும் கல்விக் குழுத் தலைவருமான டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதனும் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ நெல்சன், இந்திய மாணவர்கள், தொழில் மேம்பாட்டு துறையால் நிர்வகிக்கப்படும் தொழில்திறன் கல்வியில் கலந்து பயிற்சி பெற்று வேலைவாய்ப்பையும் பெறலாம்; முயற்சியும் ஆர்வமும் உள்ளவர்கள் சொந்தத் தொழிலையும் தொடங்கலாம் என்று குறிப்பிட்டார்.

தற்போதைய மதானி அரசாங்கமும் இதைத்தான் ஊக்குவிக்கிறது. எனவே, கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் மட்டுமல்ல; தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்களும் இத்தகைய தொழில் திறன் கல்வியை கற்று வாழ்க்கையில் உயரலாம் பெரும்பாலும் தொழில் கல்வி கற்றவர்கள் சொந்த தொழில் செய்வதற்கான வாய்ப்பு மிக அதிகம். மாத சம்பளம் பெறுபவர்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்த முடியும்; ஆனால் சொந்தமாக தொழில் செய்பவர்கள்தான் தங்களின் வாழ்க்கையை உயர்த்த முடியும் என்று டத்தோ நெல்சன் மேலும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதிலும் இருந்து மஇகா மகளிர் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் தேசிய ஊடகப் பிரிவின் தலைவருமான திரு.எல். சிவசுப்பிரமணியன், திரங்கானு மாநில மஇகா தலைவர் டாக்டர் பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


