
தொழிலதிபர் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் மறைவை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்து வருந்தும் அதேவேளை, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக தாமரைக் குழும இயக்குநர் டத்தோ ரெனா. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் என்னும் மாமனிதர், மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் கல்வி நல உதவித் திட்டங்களுக்கும் வாரி வாரி வழங்கியவர்.
இடதுகைக்குத் தெரியாமல் வலது கையால் கொடுத்ததை யெல்லாம் எந்த ஏட்டிலும் பார்க்கவோ படிக்கவோ முடியாது.
கோடிக் கணக்கான வெள்ளியை, இந்திய சமுதாயத்திற்கு மட்டும் என்றில்லாமல் நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தர்மமாக வழங்கியவர்.
நாட்டின் தொழில் கட்டமைப்பிற்கும் தகவல்துறை மேம்பாட்டிற்கும் பெரும்பங்கு ஆற்றியவருமான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் பெயர் மலேசிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இத்தகைய மாமனிதரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு தாமரைக் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ரெனா இராமலிங்கம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.


