
கோலாலம்பூர்: டிச 19-
புதிய மனிதவள அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ ரமணன் மூலமாக அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு பிறக்கலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்
(பிரிமாஸ்) தலைவர் டத்தோ சுரேஷ் கோவிந்தசாமி நம்பிக்கையை தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
“இவ்வேளையில் பிரிமாஸ் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்”.
அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லை என்ற குறை இரண்டு ஆண்டுகளாக இருந்தது.
இதற்கு தீர்வுக் காணப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
மனிதவள அமைச்சரை இரு தினங்களுக்கு முன் பிரிமாஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது உணவகத் துறையில் உள்ள அந்நிய தொழிலாளர் பிரச்சினை குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
ஆகக் கடைசியாக உணவகத் துறைக்கு கடந்த 2022ஆம் ஆண்டு அந்நிய தொழிலாளர் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் Gantian எனப்படும் மாற்று அந்நிய தொழிலாளர்களுக்கான நடை முறைகளும் கடுமையாக உள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்று டத்தோ சுரேஷ் கோவிந்தசாமி தெரிவித்தார்.


